“என் கவுரவம் உங்கள் கைகளில்” - தொப்பியைக் கழற்றி உமர் அப்துல்லா உருக்கம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 1-ம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவர் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர்பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது தன் தொப்பியைக் கழற்றிய அவர், “என்னுடைய கவுரவம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இரு கரம் கூப்பி கேட்கிறேன். இந்த முறை எனக்கு வாய்ப்புத் தாருங்கள். நான் உங்களுக்காக சேவையாற்றுவேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றார்.

தேசிய மாநாட்டுக்கு கட்சிக்குகந்தர்பால் முக்கியமான தொகுதியாகும். அக்கட்சியின் நிறுவனர் ஷேக் முகம்மது அப்துல்லா 1977-ல்அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் மகன் பரூக்அப்துல்லா 1983, 1987, 1996ஆகிய தேர்தல்களில் அத்தொகுதியில் வெற்றிபெற்றார். உமர் அப்துல்லா 2008-ம் ஆண்டு அத்தொகுதியில் வெற்றிபெற்று முதல்வரானார். இந்நிலையில், அவர் மீண்டும் அத்தொகுதியில் களமிறங்குகிறார்.

காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 51 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 32 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன

x