கட்சி தாவிய எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: இமாச்சல் சட்டசபையில் புதிய மசோதா!


சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பதவி விலகும் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தும் மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல மற்ற கட்சிகளுக்குத் தாவிய எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என மசோதா கூறுகிறது.

இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய புதிய மசோதாவின்படி, மற்ற கட்சிகளுக்குத் தாவிய எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. பதவி விலகிய எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தும் புதிய மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றியது.

இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை (உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம்) திருத்த மசோதா 2024 முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவால் தாக்கல் செய்யப்பட்டது. "அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருக்க மாட்டார்" என்று மசோதா குறிப்பிடுகிறது.

முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சேத்தன்யா சர்மா மற்றும் தேவிந்தர் குமார் ஆகிய 6 எம்எல்ஏ.க்கள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு சுதிர் ஷர்மா மற்றும் இந்தர் தத் லகன்பால் ஆகியோர் வென்றனர். ஆனால் மற்ற நால்வரும் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த ஆறு பேரும் பிப்ரவரியில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

x