இன்னும் 3 மாதங்களில் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


பெங்களூரு: படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்னும் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அவற்றை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மீரட்-லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர் கோவில் வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில் தயாராகிவரும் படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வந்தே பாரத், வந்தே பாரத் மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ஆகிய ரயில்கள் மூலம் நாட்டின் ரயில் சேவை மேம்படும். மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்கள்படி அனைத்து ரயில்களையும் நாங்கள் மேம்படுத்துவோம். அம்ரித்பாரத் ரயில்களில் இருவர் பயணிக்கும் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

படுக்கைகளுக்கு இடையேயுள்ள சங்கிலிக்கு பதிலாகபுதிய முறை அறிமுகப்படுத்தப்பட வுள்ளது. கழிவறைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில் டிரைவர் கேபினிலும் கழிவறைகள் அமைக்கப்படவுள்ளன. படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் ரயில் இன்னும்ஒன்றரை மாதத்தில் பரிசோதனை ஓட்டத்துக்கு தயாராகிவிடும். இன்னும் 3 மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

x