வெற்றியை இலக்காகக் கொண்டு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் விநோதமான உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடுகளை இறுதி செய்யும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு (ஜேடிஎஸ்) 5 மக்களவைத் தொகுதிகளை பாஜக முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹாசன், மாண்டியா, கோலார், பெங்களூரு ரூரல் மற்றும் தும்கூர் ஆகிய தொகுதிகள் ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி.குமாரசாமியும், அவரது மகன் நிகிலும் புதுடெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளனர். இதுகுறித்து ஜேடிஎஸ் பிரமுகர் ஒருவர் கூறுகையில், “ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய தொகுதிகளில் ஜேடிஎஸ் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுவர்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் பாஜக சின்னத்தில் ஜேடிஎஸ் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதேபோல், தும்கூரில், ஜேடிஎஸ் சின்னத்தில் பாஜக வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.
முந்தைய தேர்தல்களில் சாதி, கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதம், வெற்றிக்கான சூழல், வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜேடிஎஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜேடிஎஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜக கூட்டணியில் இணைந்தது.
மாண்டியா தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...