இந்தியா கூட்டணியில் பூசல்களை சமாளிக்க இம்மாத இறுதியில் மும்பையில் அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து கூட்டு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, அசுர பலத்துடன் திகழும் பாஜக-வை எதிர்கொள்ள நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் அணி திரண்டுள்ளன.
இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, திமுக, திரிணமூல் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் இக்கூட்டணியில் தலைவர்களிடையே ஒற்றுமையில்லாததால் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிளவை சந்தித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு திருப்திகரமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதில் தீர்வு எட்டப்படாத நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
அதே நாளில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் தங்கள் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்றும், காங்கிரஸுடன் நாங்கள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிரடியாக அறிவித்ததால், இந்தியா கூட்டணியில் கடும் சலசலப்பு ஏற்பட்டது.
இது எல்லாவற்றையும் விட, இந்தியா கூட்டணிக்கு அடித்தளம் போட்ட பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமார், கூட்டணியை முறித்துக்கொண்டு எதிரியான பாஜக முகாமுக்கு சென்று சேர்ந்துவிட்டார். இவ்வாறு தேர்தலுக்கு முன்னதாகவே கடும் சோதனைகளை எதிர்கொண்டுள்ள இந்தியா கூட்டணி தலைவர்களை காங்கிரஸ் இழுத்துப்பிடித்து வருகிறது.
தற்போது மம்தா பானர்ஜியையும், கேஜ்ரிவாலையும் சமாதானப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவும், வெளியில் தங்கள் கூட்டணி பலமாக இருப்பதை காண்பிக்கும் விதமாகவும் இந்த மாத இறுதியில் மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் கூட்டு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் பேரணியில், ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தலைவர்களையும் மீண்டும் இணைத்து ஒற்றுமையை நிரூபிக்க காங்கிரஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...