மேகாலயாவில் 2 வயது சிறுவனுக்கு போலியோ பாதிப்பா? - அச்சத்தில் உறைந்த இந்தியா


ஷில்லாங்: மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தொலைதூர டிக்ரிகில்லா கிராமத்தில் உள்ள இரண்டு வயது சிறுவனுக்கு போலியோமைலிடிஸ் அல்லது போலியோ அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அசாமின் கோல்பராவில் உள்ள மருத்துவமனையில் அச்சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்தியாவில் கடைசியாக போலியோ பாதிப்பு 2011ல் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக போலியோ இல்லாத நாடாக இருப்பதால், மீண்டும் போலியோ பாதிப்பு குறித்த இந்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

இது எந்த மாதிரியான போலியோவைரஸ் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை (WHO) மாநில அரசு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் குழுவும் டிக்ரிகில்லா கிராமத்திற்கு வந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.

போலியோமைலிடிஸ், பொதுவாக போலியோ என்று அழைக்கப்படுகிறது. இது போலியோமைலிடிஸ் வைரஸால் ஏற்படும் மிகவும் தீவிர தொற்று நோயாகும். இதுகுறித்து பேசிய மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, "நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர், மாநிலத்தில் சந்தேகிக்கப்படும் போலியோ வழக்கு தொடர்பான நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம். நாங்கள் பல காரணிகளை தீர்மானித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

x