வரிகள் குறித்து பங்குச்சந்தை தரகரின் இரண்டு கேள்விகள்: நிர்மலா சீதாராமன் பதிலால் விமர்சனம்


மும்பை: மத்திய அரசின் வரிகள் குறித்து கேள்வி எழுப்பிய பங்குச்சந்தை தரகர் எழுப்பிய இரண்டு கேள்விகளும், அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் இணையதளவாசிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குச்சந்தை தரகர் ஒருவர் மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து இரண்டு கேள்விகளை முன்வைத்தார். அவர் நிர்மலா சீதாராமனிடம், “மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால் அரசாங்கமோ எந்தவித உதவியும் இல்லாமல் ‘உறங்கும் பார்ட்னர்’ போல மாறி, ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, முத்திரை வரி, பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) போன்ற வரிகளை விதித்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. எங்களின் லாபத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது.

இத்தனை வரிகளை செலுத்திய பின் ஒரு வீடு வாங்குகிறோம் என்றாலும், அங்கும் ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் விதிக்கப்படுகிறது. ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னனென்ன. ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்து ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்று கேள்வி எழுப்பினார். அதிக வரிவிதிப்பின் மூலம் மத்திய அரசு பணம் பெறுவதை சுட்டிக்காட்ட அந்த தரகர் மத்திய அரசை ‘உறங்கும் பார்ட்னர்’ என அழைத்தார்.

இந்த மேற்கோளை முன்வைத்தே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. ‘உறங்கும் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது.” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்த கருத்து சர்ச்சையாகி வருகிறது. அதிக வரி முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கேள்விக்கு சரியான பதிலை கொடுக்காமல் சிரிக்கிறார் நிதி அமைச்சர் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.