கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை


கொல்கத்தா: மேற்குவங்கத்தின் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் மத்திய புலனாய்வுத் துறை மூன்றாவது நாளாக விசாரணை நடத்தியது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸார் உட்பட 20 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சந்தீப்பை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ய எங்களிடம் பல கேள்விகள் உள்ளன. இந்தச் சம்பவம் ஒரு சதியா அல்லது முன் திட்டமிட்ட சம்பவமா என்று கண்டறிய நாங்கள் முயற்சிக்கிறோம்" என்றார்.

இதனிடையே முன்பு நடந்த விசாரணையின் போது, பெண் மருத்துவரின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் சந்தீப் குமார் என்ன நடவடிக்கை மேற்கொண்டார், யாரை எல்லாம் தொடர்பு கொண்டார். மேலும் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஏன் மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்தார். கொலை நடந்த பின்னர் அந்த செமினார் ஹாலுக்கு அருகில் உள்ள அறைகளை புதுப்பிக்க யார் உத்தரவிட்டது என்று விசாரித்தனர். பெண் மருத்துவரின் கொலை நடந்த சில நாட்களுக்கு பின்னர் சந்தீப் குமார் கோஷ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி பெண் மருத்துவர் கொலை: மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

x