ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை; சட்டரீதியாக சந்திப்பேன் - சித்தராமையா உறுதி 


பெங்களூரு: ஆளுநரின் செயல் அரசியல்சானத்திற்கு எதிரானது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் சதி செய்கின்றன என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகர மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ), அதற்கு மாற்றாக 14 வீட்டு மனைகளை அவருக்கு வழங்கிய‌து. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான மனுக்களின் அடிப்படையில் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் இன்று அனுமதி அளித்துள்ளார்

இதனையடுத்து மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் ஆளுநர் அளித்துள்ள சட்டவிரோத ஒப்புதல் என்பதால், இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன். ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோர் மீது நாங்கள் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்குப்பதிய அனுமதி தரப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த செயல் அரசியல்சானத்திற்கு எதிரானது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் சதி செய்கின்றன. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்சினைகளை சட்டப்படி சந்திப்பேன். காங்கிரஸ் மேலிடம், அமைச்சரவை, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்” என்று அவர் கூறினார்.

துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் கூறுகையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரிக்க அனுமதி வழங்கியது உள்நோக்கம் கொண்டது. இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரபராதி என அவர் நீரூபிப்பார்" என்றார். இந்நிலையில் கர்நாடக ஆளுநரின் ஒப்புதலைக் கண்டித்து வருகிற ஆக. 19ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

x