மும்பை: தானே மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 30 வயது ஆணை, பெண் ஒருவர் சமையல் கரண்டியால் அந்தரங்க உறுப்பில் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள 26 வயது பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அனில் சத்யநாராயண் ரச்சா என்பவர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியாக, சமையலறைக்கு ஓடி, ஒரு உலோக கரண்டியை எடுத்து ரச்சாவை அடித்ததுடன், அவரது அந்தரங்க உறுப்பையும் கரண்டியால் தாக்கினார். நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த ராச்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ரச்சா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) கீழ் பாலியல் துன்புறுத்தல், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் ரச்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரச்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இன்னும் கைது செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.