முன்னாள் அமைச்சர் ரோஜா மீது ஊழல் புகார் - விசாரணை நடத்த சிஐடி பரிந்துரை


விசாகப்பட்டினம்: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு அம்மாநில சிஐடி போலீஸார் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், நடிகை ரோஜா ஆந்திராவில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தினார். அந்த நிகழ்ச்சிகளில் 150 கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பல்வேறு தரப்பிலிருந்தும் விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ரோஜா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க விஜயவாடா மாநகர காவல் ஆணையருக்கு சிஐடி ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து விரைவில் நடிகை ரோஜா உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் ஆந்திர அரசியல் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.

x