இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 45 நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் 128 சாலைகள் மூடப்பட்டன. இமாச்சலில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மழை தொடர்பான சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று மாலை முதல் நஹன் (சிர்மவுர்) பகுதியில் 168.3 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து சந்தோலில் 106.4 மிமீ, நக்ரோட்டா சூரியனில் 93.2 மிமீ, தவுலகுவானில் 67 மிமீ, ஜப்பர்ஹட்டியில் 53.2 மிமீ மற்றும் கந்தகஹட்டியில் 45.6 மிமீ மழை பெய்துள்ளது. .

மழை காரணமாக 44 மின்சாரம் மற்றும் 67 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை மண்டி, சிர்மூர், சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருக்கும் என்றும் வானிலைத் துறை எச்சரித்துள்ளது.

சனிக்கிழமையன்று ஹமிர்பூர் மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஹமிர்பூர் துணை ஆணையர் அமர்ஜித் சிங், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மோசமான வானிலை காரணமாக மக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சமடைய வேண்டாம் என்றும், மின் கம்பிகளில் கவனமாக இருக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இமாச்சலில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மழை தொடர்பான சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த காலகட்டத்தில் சுமார் ரூ.842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய பருவமழையினை அடுத்து மாநிலத்தில் மழைப் பற்றாக்குறை ஆகஸ்ட் 10ம் தேதி வரை 28 சதவீதமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் சராசரி மழைப்பொழிவு அளவான 455.5 மிமீக்கு பதிலாக 328.8 மிமீ மழை பெய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 16 வரை கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையை மாநில வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

x