மழைநீர் தேங்கிய குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு -  டெல்லியில் அதிர்ச்சி


டெல்லி: பிரேம் நகர் பகுதியில் மழைநீர் நிரம்பிய குளத்தில் 9 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறார்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பிரேம் நகர் பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ராணி கேரா கிராமத்தில் உள்ள குளத்தில் மழைநீர் முழுமையாக நிரம்பியுள்ளது.

இந்த சூழலில் பிரேம் நகர் காலனியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் ராணி கேரா குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குளித்துக்கொண்டிருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறார்கள் மிகவும் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் அப்பகுதிக்கு வந்து உயிரிழந்த சிறுவர்களை மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x