மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு செப்.3ல் தேர்தல் - வெளியானது அறிவிப்பு!


புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப். 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அசாம், பிஹார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்டு 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 21ம் தேதி நிறைவுபெறுகிறது. அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஆக. 26 எனவும், பீகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் ஆக. 27 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப். 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

x