பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி


புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை முதல் வாரத்தில், எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அதன்பின்னர் இன்று மீண்டும் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் எல்.கே.அத்வானியின் உடல்நிலையை, நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் வினித் சூரி கண்காணித்து வருகிறார்.

அத்வானி 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகவும், 1999 முதல் 2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த மார்ச் மாதம், அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவரது இல்லத்தில் வழங்கினார். அந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதேபோல, மூன்றாவது முறையாக பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்பு பிரதமர் மோடி, அத்வானியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

x