தேர்தல் பத்திர முறைகேட்டில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு


புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறக் கூடிய திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.12,145.87 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிரடியாக இந்த நடைமுறையையே ரத்து செய்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் அரசு சாரா நிறுவனங்கள் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அதில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் விசாரணை ஏஜென்சிகள் இடையேயான தொடர்புகள், போலி நிறுவனங்கள் மூலமான தேர்தல் பத்திர நன்கொடை ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்களை ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

x