4 நாட்களுக்கு பிறகு ஒரே குடும்பத்தில் 4 பேர் மீட்பு


முண்டக்கை: வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4-வது நாளான நேற்று தொடர்ந்தது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சூரல்மலையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் படவெட்டிகன்னு. இக்கிராமத்தைச் சேர்ந்த ஜானி குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவால் இவர்கள் வீடு மற்ற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று ஜானி குடும்பத்தினர் 4 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஜானி குடும்பத்தில் 2 ஆண்கள், பெண், சிறுமி என மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். நிலச்சரிவால் ஜானியின் வீட்டைச் சுற்றிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவரதுவீடு மட்டும் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, அவர் தன் குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளே 4 நாட்கள் இருந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

x