வீட்டிற்குள் இரண்டு மகள்களுடன் சடலமாக கிடந்த தாய்: கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை


சாகர்: மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இரண்டு மகள்களுடன் தாய் சடலமாக கிடந்த சம்பவத்தில் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் நகர் சிவில் லைன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேபாள அரண்மனை பகுதியில் வசித்து வருபவர் விஷேஷ் படேல். இவரது மனைவி வந்தனா (32). இவர்களது பெண் குழந்தைகள் அவந்திகா (8), அன்விகா (3).

இந்நிலையில் நேற்று இரவு சிவில் லைன் காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் வந்தனா, அவரது இரு பெண் குழந்தைகள் அவந்திகா, அன்விகா ஆகியோர் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வந்தனாவும், அவந்திகாவும் சமையலறையிலும், அன்விகா படுக்கையறையிலும் சடலமாகக் கிடந்தனர்.

இதையடுத்து அவர்களது சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஷேஷ் படேல் மருத்துவமனையில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் போலீஸ் (ஏஎஸ்பி) சஞ்சீவ் உய்கே தெரிவித்துள்ளார்.

x