9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு


புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 6 புதிய ஆளுநர்களை நியமித்தும், 3 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அசாம் மற்றும் மணிப்பூர்: சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த லட்சுமண் பிரசாத் ஆச் சார்யா அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மணிப்பூர் ஆளுநர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதனால் இவர் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கிக்கு பதில் பணியாற்றுவார்.

பஞ்சாப்: பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் குலாப் சந்த் கடாரியா பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசநிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிக்கிம்: சிக்கிம் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா: ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட்: ஜார்கண்ட் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் நியமிக்கப் பட்டுள்ளார்.

தெலங்கானா: தெலங்கானாவின் புதிய ஆளுநராக ஜிஷ்னு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர்.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் ஆளுநராக இருந்தகல்ராஜ் மிஸ்ரா மாற்றப்பட்டு அவருக்கு பதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹரிபாவ் கிசான்ராவ் பக்டே புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் ஆளுநராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி. ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வுக்குப்பின் குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேலிடம் தலைமை முதன்மைச் செயலாளராக 10 ஆண்டு காலம்பணியாற்றினார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இவர் இருந்தார்.

மேகாலயா: மேகாலயா ஆளுநராக மைசூரைச் சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி. விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

x