பைக்கில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம்: விபத்துகளை குறைக்க அதிரடி முடிவு


திருவனந்தபுரம்: வாகனம் ஓட்டும் போது இருசக்கர வாகனத்தின் பின்சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம் விதிக்கும் திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை போலீஸாரும், போக்குவரத்துத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகளை குறைப்பதற்காக அவ்வப்போது புதிய சட்டங்கள் மற்றும் சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரில் பயணிப்பவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வாகன ஓட்டிகளின் கவனச்சிதறலை தடுப்பதற்காக புதிய சட்ட விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இனி இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், பின்னால் அமர்ந்திருப்பவருடன் பேசினால், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இது எந்த வகையான விதிமீறலில் வரும் என்பது குறித்த விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்கும் நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது, இருவரும் பேசிக்கொள்ளாமல் பயணிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

x