மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: மேற்குவங்கம், கேரள ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில் தாமதம் செய்யும் ஆளுநர்களின் நடவடிக்கையை எதிர்த்து கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அம்மாநில ஆளுநர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அம்மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கு உதாரணமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநருக்கும் பல்வேறு விவகாரத்தில் நீடிக்கும் மோதல் போக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய இரு மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள், எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் அந்தந்த ஆளுநர்கள் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளதாக கூறி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரு மாநில அரசுகளும் வழக்குத் தொடுத்தன.

இந்த வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பும் ஆளுநரின் முடிவில் நாங்கள் சவால்களை எதிர்கொள்கிறோம்" என்றார்.

இதேபோல், மேற்கு வங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ஜெய்தீப் குப்தா ஆகியோர், "ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும்போது, ஆளுநர் மாளிகை குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்புகிறது.” என்றனர்.

இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இரு மாநில ஆளுநர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

x