அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆவேசம்


பெங்களூரு: அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.

கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். மேலும் அந்த ஊழலுக்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்.ஜி.சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.14.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நாகேந்திரா, ரெய்ச்சூர் காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருமான பசனகவுடா தட்டல், நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து நாகேந்திரா கைது செய்யப்பட்டார். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக குரல் கொடுத்து வருகிறது.

இந்த ஊழல் வழக்கில், முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என மாநில அரசு அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததற்காக, அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் இருவர் மீது திங்கள்கிழமை கர்நாடக அரசு சார்பில் வழக்குப் பதியப்பட்டது. சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷ் பி அளித்த புகாரின் அடிப்படையில், வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் இரண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை சிக்க வைப்பதற்காக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக கர்நாடகா சட்டப்பேரவை வளாகம் உள்ள விதான் சவுதாவுக்கு வெளியே உள்ள காந்தி சிலை முன்பு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில்," அமலாக்கத்துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வழக்கை மூன்று புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. வால்மீகி வளர்ச்சி கழகத்தில் முறைகேடு இல்லை என்று நாங்கள் கூறவில்லை. 186 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மாநகராட்சியின் வருவாய் ரூ.89.63 கோடி. இந்த வழக்கில் ஏற்கெனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பணம் மீட்கப்பட்டுள்ளது. எஸ்ஐடி அதிகாரிகளின் விசாரணை 90 சதவீதம் முடிந்துள்ளது.

வங்கி அதிகாரிகளின் புகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷிடம் அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது, ​​முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரி கல்லேஷை மிரட்டி அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், அழுத்தம் கொடுத்ததாகவும் கல்லேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை பலவீனப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. அமலாக்கத்துறையின் இத்தகைய அச்சுறுத்தல்களால் நாங்கள் அஞ்சவில்லை. அதன் விசாரணையில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அது எங்களது அரசாங்கத்தை குறிவைத்து செயல்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக சட்டப்படி போராடுவோம்" என்று அவர் கூறினார்.

x