கர்நாடகாவில் நிலச்சரிவு: ஜூலை 31 வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை!


சிக்கமகளூருவில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லையனகிரி, தத்தாபீடம், சீதளய்யனகிரிக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல ஜூலை 31-ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் வழக்கத்தை விட 25 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. வார விடுமுறை நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு வருவார்கள். இதனால் சுற்றுலாத்துறைக்கு பெரும் வருமானம் கிடைத்து வந்தது.

ஆனால், காற்றுடன் பெய்த கனமழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சந்திரதுரோண மலைக்கோட்டத்தில் மலை இடிந்து விழுந்து பெரிய பாறைகள், மண், மரங்கள் சாலையில் விழுந்து வருகிறது. இதனால் முல்லையனகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மீனா நாகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் தத்தாபீடம், சீதளய்யனகிரி, ஹொன்னம்மா ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கைமாரா சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது.

x