மோடி ஆட்சியின் ஹாட்ரிக் பட்ஜெட்: நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?! என்னென்ன புது அம்சங்கள்!


மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் 2024-25- ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வினாத்தாள் கசிவு தொடர்பாக விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய கல்வி அமைச்சரை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டிற்கான (2024-25) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழவாது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்து முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்கிறார். அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற இலக்குடன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்ய உள்ளார். அதில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளை அவர் பட்டியலிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில், மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சாலைப் போக்குவரத்து, ரயில்வே, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமான அளவு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புற பொருளாதார மேம்பாடு, எளிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு சார்ந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் இந்த முழு பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நடுத்தர மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் வருமான வரி தொடர்பான சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் டிஜிட்டல் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் வங்கி, நிதி அமைப்புகளில் சிறப்புத் திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. வங்கி, காப்பீடு, சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் துறை, மின்சார வாகனத் துறை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

x