நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்


கோப்புப்படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜூலை 22-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி, 90 ஆண்டுகள் பழமையான அதாவது 1934-ம் ஆண்டு விமானச் சட்டத்துக்கு பதிலாக, பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் எளிதாக வணிகம் செய்யும் வகையிலான விதிகளை வழங்குவதற்காக இந்த புதிய மசோதா வரும் கூட்டத்தெடாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பேரிடர் மேலாண்மை துறையில் பல்வேறு அமைப்புகளின் பணிகளை மேலும் தெளிவுபடுத்தவும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் இந்தபுதிய மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.

இவை தவிர, சுதந்திரத்திற்கு முந்தைய கால சட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையாக கொதிகலன்கள் (பாய்லர்ஸ்) மசோதா, காபி (ஊக்குவித்தல் மற்றும் மேம்பாடு) மசோதா, ரப்பர் (ஊக்குவித்தல் மற்றும் மேம்பாடு)மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

23-ம் தேதி பட்ஜெட்: 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ல்(செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார். இதனால், நிதி மசோதாக்களும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இவ்வாறு மக்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை (பிஏசி) அமைத்துள்ளார்.சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவில் சுதிப் பந்தோபாத்யாய் (டிஎம்சி), பிபி சவுத்ரி (பாஜக), லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (டிடிபி), நிஷிகாந்த் துபே (பாஜக), கெளரவ் கோகோய் (காங்கிரஸ்), சஞ்சய் ஜெய்ஸ்வால் (பாஜக), திலேஷ்வர் கமைத் (ஜேடியு), பர்த்ருஹரி மஹ்தாப் (பாஜக), தயாநிதி மாறன் (திமுக), பைஜயந்த் பாண்டா (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனா-யுபிடி), கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), அனுராக் தாக்கூர் (பாஜக) மற்றும் லால்ஜி வர்மா (எஸ்பி) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

x