அரசு மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை


ஆனேக்கல் அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஊரகப்பகுதியில் உள்ள ஜிகானியைச் சேர்ந்தவர் முனியல்லப்பா(46). இவர் ஆஸ்துமா, வயிற்று வலி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் அன்றே அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.

இந்த நிலையில் முனியல்லப்பாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார். அங்கு மருத்துவமனையின் இரண்டாவது மாடிக்குச் சென்ற முனியல்லப்பா அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆனேக்கல் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியல்லப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக முனியல்லப்பா தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x