தகாத உறவால் கணவரை விஷம் கலந்து கொன்றார்: குழந்தைகள் ஏற்றுக்கொள்ளாததால் உயிரை மாய்த்த தாய்


விஜயலட்சுமி

உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரைக் கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பெண்ணை குடும்பத்தாரும் குழந்தைகளும் ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த பெண், கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் கடந்த 27-ம் தேதி இரவு பெண்ணின் சடலம் மிதப்பதாக ஐஸ் ஹவுஸ் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதனைத் தொடர்ந்து சடலமாகக் கிடந்த பெண் யார் என்பது குறித்தும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் ஐஸ் ஹவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சடலமாகக் கிடந்த பெண் கடந்த சில நாட்களாக பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தைச் சுற்றித் திரிந்து வந்தது தெரியவந்தது. ஆனால் அந்தப் பெண் யார் என்ற விவரம் தெரியாத நிலையில், போலீஸார் தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் மற்றும் குற்றவாளிகளின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கும் பிரத்தியேக இணையதளத்தை (CCTNS) பயன்படுத்தி இறந்த நபரின் புகைப்படத்தை பதிவிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், சடலமாகக் கிடந்த பெண் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பியவர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாகக் கிடந்த பெண், சென்னை சூளைமேடு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி விஜயலட்சுமி (40) என்பதும், அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகாத உறவு வைத்திருந்த மோகன் (எ) முண்டக்கண்ணு என்பவருடன் சேர்ந்து கணவர் செல்வத்தை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் சூளைமேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

விஜயலட்சுமிக்கு உடந்தையாக இருந்த மோகன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. விஜயலட்சுமி தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் அவனுடன் கூட்டு சேர்ந்து கணவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமியை அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவரை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.

மோகன்

குடும்பத்தார் ஒதுக்கியதால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தருகே தங்கியபடி, கிடைக்கும் வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு, குளத்தின் முகப்பில் உள்ள சிறிய கதவு வழியாக உள்ளே நுழைந்த விஜயலட்சுமி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, விஜயலட்சுமியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வந்த நிலையில், ஐஸ் ஹவுஸ் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

கணவரைக் கொன்ற விஜயலட்சுமியை பெற்ற பிள்ளைகளும், குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x