உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த மலைக்குறவர் வேல்முருகனின் உடல் முதல் மனைவியிடம் ஒப்படைப்பு!


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த மலைக்குறவர் வேல்முருகன் உடல், அவரின் முதல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது சொந்த ஊரான மணிமங்கலத்தில் முதல் மனைவியின் குழந்தைகள் முன்னிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி படப்பை பகுதியைச் சேர்ந்த மலைக்குறவர் வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். போலீஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 12-ம் தேதி வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி சித்ரா, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வேல்முருகனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பதையும் முதல் மனைவி வெண்ணிலா சேலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்து சட்டப்படி வேல்முருகன் உடலை முதல் மனைவியிடம்தான் ஒப்படைக்க முடியும் என்கிற அடிப்படையில் வெண்ணிலாவை வரவழைத்து இன்று காலை 5 மணிக்கு வேல்முருகன் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவரது உடலை படப்பை அருகே உள்ள சொந்த ஊரில் வைத்து முதல் மனைவி வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வேல்முருகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டாவது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மணிமங்கலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x