கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்து உடல்களை சமைத்து சாப்பிட்டார்களா?: பதறவைக்கும் வாக்குமூலம்


நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள்

செல்வம் கொழிக்கும் என்ற கற்பனையில் மூடநம்பிக்கையின் உச்சமாக இருபெண்களை நரபலி கொடுத்த விவகாரத்தில் தம்பதிகள் உள்பட மூவரைக் கேரள போலீஸார் கைது செய்தனர். மூவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அடுத்தது வெளியாகும் தகவல்கள் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

ஷிகாப்

மாயமான விளிம்புநிலை பெண்கள்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் இலந்தூரில் பாரம்பர்ய மருத்துவராக இருப்பவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா. இவர்களிடம் முகநூல் வழியாக அறிமுகம் ஆன எர்ணாக்குளம் மாவட்டம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முகம்மது ஷிகாப் தொடர்பு கொண்டிருக்கிறார். தனக்கு மந்திரங்கள் தெரியும் எனச் சொன்னவர், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும், செல்வங்களும் பெருக நரபலி கொடுத்தால் ஏற்றம் பெறலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பகவல் சிங்- லைலா தம்பதியினர் ஷிகாப்பின் வலையில் விழுந்தனர். தொடர்ந்து அவர்களிடம் ஷிகாப் தானே அதற்கு பெண்களை அழைத்துவருவதாகச் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேரளத்தின் கடவந்தறா பகுதியில் தனியாக வசித்துவந்த, சாலையோர லாட்டரி சீட்டு விற்பனையாளரான ரோஸ்லி(59) என்ற பெண் திடீரென காணாமல் போனார். கடந்த ஆகஸ்ட் மாதமே இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணும் திடீரென காணாமல் போனார். பத்மா எர்ணாக்குளத்தில் தங்கியிருந்து கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்தார். அவரைத் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே ஒலிக்க, கொச்சின் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இரு பெண்கள் மாயமானதும் ஒரேபாணியில் இருந்ததாலும், இருவருமே உடன் யாரும் இல்லாமல் தனிமையில் லாட்டரி சீட்டு விற்று பிழைப்பு நடத்தும் பெண்கள் என்பதும் இதன் பின்னால் ஏதும் பெரியசதி இருக்குமோ என கேரள காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர். இதில் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவல்லா பகுதியில் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் ஷிகாப்புடன் பத்மா செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷிகாப்பை விசாரித்தபோது பல அதிரவைக்கும் தகவல்கள் கசிந்தன.

கைதான தம்பதி

துள்ளத் துடிக்க நரபலி!

இந்த வழக்கு குறித்து ஷிகாப்பிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஷிகாப் அளித்த வாக்குமூலத்தில், இலந்தூரில் பாரம்பர்ய மருத்துவர் பகவல்சிங் வீட்டுக்கு அழைத்துப் போய் இருபெண்களையும் நரபலி கொடுத்ததாகச் கூறினார். பெண்களை நரபலி கொடுக்க அழைத்துவருவதற்கு தம்பதிகளிடம் இருந்து பணம் பெற்றேன். முதலில் ரோஸ்லியை நரபலி கொடுத்தோம். ஆனால் எங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை. இதனைத் தொடர்ந்தே பத்மாவையும் நரபலி கொடுத்தோம். கழுத்தை அறுத்து நரபலி கொடுத்து, அவர்கள் உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டிலேயே புதைத்தோம். ரோஸ்லி, பத்மா இருவரையும் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி அழைத்து வந்தேன். நான் ஆரம்பத்தில் கார் டிரைவராக இருந்ததால் எனது காரிலேயே அழைத்துவந்தேன்” என்று கூறியுள்ளார்.

நரபலி கொடுக்கப்பட்ட பகவல் சிங் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரான ஜோஸ் தாமஸ் என்பவர் தன் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாருக்குக் கொடுத்தார். அதுதான் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாகவும், திருப்புமுனையாகவும் அமைந்தது. ஜோஸ் தாமஸ் இதுகுறித்து காமதேனுவிடம் கூறுகையில், “பகவல்சிங்கும், அவர் மனைவியும் மிக சாதாரணமானவர்களாகவே எங்களுக்குத் தெரிந்தார்கள். பகவல்சிங் ஆயுர்வேத சிகிச்சை செய்வார். ஷிகாப் அடிக்கடி ஸ்கார்பியோ காரில் அவரைத்தேடி வருவார். இருவாரங்களுக்கு முன்புகூட பார்த்தேன். ஷிகாப் செல்போனில் பேசியபடியே நடந்து சென்றுகொண்டிருந்தார். மற்றபடி, இந்தப் பகுதிவாசிகளுக்கு அந்த தம்பதியினரால் சிறுதொந்தரவுகூட கிடையாது. அதனால்தான் அனைவரும் நரபலி குறித்துக் கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டோம். இவ்வளவு கொடூரமான செயலைச் செய்துவிட்டு சகஜமாக இருந்தனர்” என்றார்.

பத்மா, ரோஸ்லியின் உறவினர்களால் அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்களின் உடல்கள் உருக்குலைந்து இருந்தது. இந்நிலையில் அந்த உடல்களை அடையாளம் காணும்வகையில் டி.என்.ஏ சோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சமைத்து சாப்பிட்டார்களா?

தம்பதிகளிடம் ஆசைகாட்டி நரபலி கொடுக்க பெண்களை அழைத்து வந்த ஷிகாப் மீது ஏற்கெனவே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்மம் செய்த வழக்கும் இருக்கிறது. இதேபோல் நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை பல துண்டுகளாக வெட்டி, அதில் சில துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை லைலா போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது. நரபலி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் கேரள மக்களை மிரளவைத்துள்ளது.

x