கிராமப்புற மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வேண்டும்: நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்


சென்னை: மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர திறமையான கிராமப்புற மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான மசோதாவும் நிறைவேற்றி ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலும் அகற்ற வேண்டும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தீர்மானத்தை இணைத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதுதவிர, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்தும்படி கடிதம் எழுதினார். அதுமட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும்படி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பதிலளித்து, நீட் தேர்வு தொடர்பாக ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜூன் 28-ம் தேதி அனுப்பிய கடிதத்துக்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்புநிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, நீட் இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே ஜூன் 4-ம் தேதி வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதும் அனைவரது கவனத்துக்கு சென்றடைந்துள்ளது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.

மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். விரைவில் தங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ராகுல் தெரிவித்துள்ளார்.

x