மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது!


மதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் காவல் உதவி ஆணையர் உட்பட 37 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் காவல் சரகத்தில் 2019-ல் போலி ஆவணங்களின் அடிப்படையில் 53 இலங்கை அகதிகள் பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக க்யூ பிரிவு போலீஸார் 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி ஆவணங்கள் அடிப்படையில் பாஸ்பேர்ட் பெற்ற 7 பேர், பயண முகவர்கள் 13 பேர், காவல்துறை அலுவலர்கள் 5 பேர், மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் 14 பேர், அஞ்சல்துறை அலுவலர்கள் 2 பேர் உட்பட 41 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் மதுரை 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு க்யூ பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நீதித்துறை நடுவர் பாக்கியராஜ் முன்பு போலி பாஸ்போர்ட் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் இளவரசன், பாஸ்போர்ட் அலுவலர்கள், தபால்துறை அலுவலர்கள், போலி பாஸ்போர்ட் பெற்றவர்கள் என 37 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

x