பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தும் மினிலாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் மினிலாரி அப்பளம்போல் நொறுங்கியது.
கோவையை அடுத்த கோபாலபுரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பொள்ளாச்சிக்கு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அய்யம்பாளையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை தனியார் பேருந்து முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிரே வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த இரண்டு பேர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
மோதிய வேகத்தில் தனியார் பேருந்து பயணிகளுடன் அருகில் இருந்து தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.