பதவிக்காலத்தை நிறைவு செய்யாமலே பாஜக ஆட்சி கவிழும்: மம்தா பானர்ஜி பேட்டி


பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே பாஜ ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மும்பையில் உள்ள மடோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்தார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூன்று கட்சி தலைவர்களும், மக்களவை தேர்தலுக்குகுப் பின் முதல் முறையாக சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறுகையில், மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜ அரசு நிலையான அரசாங்கம் அல்ல. பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பாதியிலேயே பாஜக ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. 1975-ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதியை இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மோடி ஆட்சியில் அவசரநிலை காலங்கள் தான் அதிகமாக இருந்தன. நாங்கள் அவசரநிலை காலத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இவர்களும் அதையே தான் செய்திருக்கிறார்கள். உத்தவ் தாக்கரே பிரிவினரிடம் இருந்து கட்சிப் பெயர் மற்றும் சின்னங்கள் பறிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எனினும் உத்தவ் தாக்கரே அணியினர் புலியைப் போல போராடினார்கள். அக்டோபரில் நடக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது நான் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன் என்றார்.

x