தன் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த கல்யாணப் பெண் நடுவழியில் காரைவிட்டு இறங்கி மோசமான குண்டு, குழியுமான சாலையில் நடந்து சென்ற புகைப்பட போராட்டம் வைரல் ஆகிவருகிறது.
கேரள மாநிலம் நிலம்பூர் அருகில் உள்ளது பூக்கோட்டு பாலம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜீஷா(23) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண மண்டபத்தை நோக்கி ஸ்ரீஜீஷா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருந்தது. அதில் மழை தண்ணீரும் தேங்கிக் கிடந்தது.
இதைப் பார்த்ததும் கல்யாணப் பெண் திடீர் என டிரைவரிடம் அண்ணன் கொஞ்சம் காரை ஓரமாக நிறுத்துங்கள் எனச் சொல்லி நிறுத்தினார். தொடர்ந்து முகூர்த்தப்பட்டு, கழுத்தில் நகைகள் சகிதம் அந்தக் குண்டு குழியுமான சாலையின் முன்பு புகைப்படம் எடுத்தார். ‘ப்ரீ வெட்டிங் போட்டோசூட்’டிற்கு இப்படி ஒரு இடத்தை தேர்வு செய்தது குறித்து மணமகள் ஸ்ரீஜீஷா கூறுகையில், “திருமண போட்டோசூட்கள் அனைத்துமே இன்றைய காலத்தில் வைரல் ஆகிவருகிறது. அதன் ஒரு அங்கமாகவே குண்டு, குழியுமான சாலையின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்த படமும் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. இதன்மூலம் அந்த சாலை சீரமைக்கப்பட்டால் மகிழ்ச்சி” என்றார்.
போட்டோ சூட்டிற்கு பின்பு தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிளையோடு திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீஜீஷா. இந்த இளம்பெண்ணின் செயல் கேரள சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.