ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்; முக்கிய விருந்தினர்கள் வருகையால் களை கட்டிய மும்பை


மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக உலக அளவில் முக்கிய பிரமுகர்கள் வருகையால் மும்பை மாநகரம் களை கட்டியுள்ளது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா தம்பதி மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் இன்று நடைபெறுகிறது.

இவர்களின் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள், பல்வேறு சடங்குகள் மிகப் பிரம்மாண்டமாக பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே நடைபெற்று வந்த இந்த கொண்டாட்டங்களில் இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், உலக தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அம்பானி குடும்ப திருமண செய்தி அவ்வப்போது ஊடகங்களிலும், இணையங்களிலும் பெரும் கவனம் பெற்று வந்தது. திருமண கொண்டாட்ட விழாக்களில் அம்பானி குடும்பத்தினர், மணமக்கள், விருந்தினர்கள் அணிந்து வந்த உடைகள், விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் என வெளியான செய்திகள் அனைத்தும் பேசுபொருளாகின.

இந்நிலையில் மும்பையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மும்பை மாநகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இச்சூழலுக்கு மத்தியில் ஆனந்த் அம்பானி திருமணம் இன்று நடைபெறுகிறது. இன்றைய திருமண விழாவில், பாலிவுட் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், உலக அரசியல்வாதிகள், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ரியாலிட்டி ஷோ நட்சத்திரங்கள் என முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். பல கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திருமணத்தால் மும்பை நகரம் முக்கிய பிரமுகர்களால் நிரம்பி வழிகிறது.

x