பட்டியல் சமூக சிறுவனை சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்: 3 பேர் கைது!


உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனைத் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், சிராவஸ்தி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் ஒலிக்கலவை மற்றும் ஆடியோ அமைப்பு செய்யும் டிஜேவாக பணியாற்றி வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு பணி முடிந்து அந்த சிறுவன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது போதையில் இருந்த அதே கிராமத்தைச் சர்ந்த கிஷன் திவாரி, திலீப் மிஸ்ரா மற்றும் சத்யம் திவாரி ஆகியோர் சிறுவனை வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது திலீப் மிஸ்ரா மதுபான பாட்டிலில் சிறுநீர் கழித்துக் கொடுத்துள்ளார். அதை சத்யமும், கிஷனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக சிறுவனை குடிக்க வைத்துள்ளனர். அத்துடன் சிறுவனிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததுடன் இந்த சம்பவத்தை வீடியோவாவும் எடுத்துள்ளனர்.

தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது மூத்த சகோதரிடம் சிறுவன் கூறினார். இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கிலாவுலா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் குடும்பத்தினர் ஒரு விழாவிற்காக ஆடியோ சிஸ்டத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி சிறுவனிடம் கிஷன் திவாரி உள்ளிட்ட மூன்று பேரும் அத்துமீறி இந்த செயலைச் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கிஷன் திவாரி, திலீப் மிஸ்ரா மற்றும் சத்யம் திவாரியை நேற்று இரவு கைது செய்தனர். பட்டியல் சமூக சிறுவனைத் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x