ஆண் குழந்தை இல்லாத ஆத்திரம்: இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை கைது


டெல்லி: ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில், பிறந்து சில நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொன்று புதைத்த கொடூர தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி, சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலன்கி. இவருக்கு சொந்தமாக ஏராளமான வீடுகள் உள்ளன. இவற்றில் வரும் வாடகையை கொண்டு இவர் வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தனக்கு ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் எனவும், அப்போதுதான் தனது சொத்துக்களை நிர்வகிக்க முடியும் எனவும் நீரஜ் உறுதியாக நம்பி உள்ளார்.

அவரது மனைவி பூஜா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த மே மாதம் 30ம் தேதி அவருக்கு ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் நீரஜ் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி, பிறந்து சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மயானத்திற்கு சென்ற போலீஸார், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜூன் 6ம் தேதி குழந்தைகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே போலீஸார் குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்த தகவல் அறிந்ததும், நீரஜ் தலைமறைவானார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில், அவரது செல்போன் எண்களை கொண்டு போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் நீரஜ் அவ்வப்போது தனது செல்போன்களை மாற்றியபடியே இருந்ததால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் எல்லைப் பகுதியான ரோட்டக் பகுதியில் பதுங்கியிருந்த நீரஜை, போலீஸார் கைது செய்தனர். ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இரண்டு பெண் குழந்தைகளையும் கொன்றதாக நீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x