கோயம்பேடு அருகே 17 வயது சிறுவனை ஆட்டோவில் கடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரத்தில் தங்கி 17 வயது சிறுவன் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் கோயம்பேடு 5-வது கேட் அருகே உள்ள கழிப்பறை வாசலி்ல் 17 வயது சிறுவன் தனது நண்பர் தக்கை என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தக்கையுடன் தகராறில் ஈடுபட்டதை சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து சென்றார். பின்னர் சிறுவன் இரவு அதே பகுதியில் மற்றொரு நண்பர் வீரா என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது மின்னல் வேகத்தில் ஆட்டோவில் வந்தது. அதில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல், 17 வயது சிறுவனை ஆட்டோவில் கடத்திச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர் வீரா, உடனடியாக கோயம்பேடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் வடபழனி அருகே அவர்களிடமிருந்து தப்பினார். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடத்தலில் ஈடுபட்ட பிரகாஷ் ,விஷால் உட்பட 5 பேரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதானவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.