போலீஸார் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரவுடியை கொல்ல முயற்சி: நீதிமன்ற வளாகத்தில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்


ரவுடி மதுரை பாலா.

சென்னையில் கொலை வழக்கில் ஆஜர்படுத்த வந்த பிரபல ரவுடியை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா (எ) மதுரை பாலா(33). ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூலிப்படை தலைவனான பாலா, இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்வதில் கைதேர்ந்தவர்.

கடந்த 2021 மார்ச் மாதம் பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரை அசோக் நகரில் வைத்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி மதுரை பாலாவை போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் மதுரை பாலாவை வேலூர் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு இன்று மாலை அழைத்து வந்தனர். நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி விட்டு வெளியே போலீஸார் அழைத்து வந்தனர்.

அப்போது நீதிமன்ற வாளகத்தில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை போலீஸார் மீது அடித்து ரவுடி பாலாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

அப்போது பாதுகாப்பிற்கு வந்த காவலர் செல்வன், பாரதி, பிரசாந்த், வெங்கடேசன், மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் ராஜலட்சுமி, கிருஷ்ணவேனி, சசிகலா , ஆகியோர் சாதுரியமாக செயல்பட்டு ரவுடி பாலாவைக் காப்பாற்றினர். இதனால் ரவுடி பாலா எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். பின்னர் போலீஸார் கொலை செய்ய முயன்றவர்களில் மூன்று பேரை விரட்டி பிடித்து கைது செய்தனர், இரண்டு பேர் தப்பி சென்றனர். பிடிபட்ட மூன்று பேரையும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ய வந்தவர்கள் செனாய் நகரை சேர்ந்த சக்திவேல்(24), அருண்(23) மற்றும் குன்றத்தூரை சேர்ந்த அப்துல்(23) என்பது தெரியவந்தது. மேலும் அமைந்தகரை பகுதியில் பிரபல ரவுடிகளான அப்பாஸ் மற்றும் ரோகித் ஆகியோரிடையே மாமூல் வசூலிப்பதில் தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரவுடி ரோகித்துக்கு ஆதரவாக மதுரை பாலா செயல்பட்டு வருவதால் ரோகித்தின் கை ஓங்கி இருந்தது. இதனால் மதுரை பாலாவை அப்பாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ரவுடி மதுரை பாலாவை கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடி அப்பாஸ் உட்பட இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் ரவுடி பாலாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

x