ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்குத் தண்டனை ரத்து: கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி


கொலை வழக்கில் தஞ்சை ரவுடி கட்டை ராஜாவுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. சென்னியமங்கலம் செந்தில்நாதன் கொலையில் 2013-ல் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கட்டை ராஜாவுக்கு தூக்குத் தண்டனையும், அவரது கூட்டாளிகள் ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கட்டை ராஜாவின் தூக்குத் தண்டனையை உறுதி செய்யக்கோரி போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்தது. ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது கட்டைராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் சிறையில் இருந்தவாறு காணொளி வழியாக உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கட்டைராஜாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிபதிகள், தண்டனையை கட்டை ராஜா சீராய்வு மனு தாக்கல் செய்யாமல் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதே நேரத்தில், ஆறுமுகம், செல்வம் ஆகியோரின் ஆயுள் தண்டனை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x