தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 3 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகர்ணா, முகமதுயாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், குமார் உட்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். தனலெட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.