விராட் கோலிக்கு சொந்தமான 'பார்' மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீஸார் அதிரடி


பெங்களூரு: பெங்களூருவில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன் 8 கம்யூன்' என்ற 'பப்' (பார்) மற்றும் எம்.ஜி. சாலையில் உள்ள பல நிறுவனங்கள் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான 'ஒன் 8 கம்யூன்' என்ற பப் மீது போலீஸார் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பெங்களூரு மத்திய காவல் துணை ஆணையர் கூறுகையில், "பப்-கள் அதிகாலை 1 மணிக்கு மூடப்பட வேண்டும்.

ஆனால் 'ஒன் 8 கம்யூன் பப்' அதிகாலை 1.30 மணி வரை திறந்திருந்தது. நள்ளிரவில் அப்பகுதியில் பலத்த இசை ஒலிப்பது குறித்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து விதிமீறல் குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது” என்றார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருகில் அமைந்துள்ள 'ஒன்8 கம்யூன் பப்’ விதிகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கைக்கு உள்ளான பப்களில் ஒன்றாகும்.

விராட் கோலியின் 'ஒன்8 கம்யூன் பப்’ டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. பெங்களூரு கிளை கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது இங்குள்ள ரத்னம் வளாகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், வேட்டி அணிந்ததற்காக'ஒன்8 கம்யூன்’ மும்பை கிளைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தது சர்ச்சையானது.

பிபிஎல் என்ற நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள பாடல்களை, பப்களில் இசைப்பதற்கு 'ஒன்8 கம்யூன்' நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்தது. அப்போதும் விராட் கோலியின் 'பப்' பெயர் செய்திகளில் அடிபட்டது.

x