கணவரை கத்திரியால் குத்திக்கொன்ற மனைவி: தகாத உறவைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!


கணவரை கத்திரியால் குத்திக்கொலை செய்து விட்டு உடலைக் கழிவறை மேற்கூரையில் வீசி விட்டு தலைமறைவான அவரது மனைவி மற்றும் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஏடிஎஸ் சர்க்கிளைச் சேர்ந்தவர் பிரஹலாத். அதே ஊரைச் சேர்ந்தவர் பூஜா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்த மகேஷ் என்பவரை பூஜா திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் பிரகஹலாத்தை மறக்க முடியாமல் பூஜா தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது காதலன் பிரஹலாத்தை தொடர்பு கொண்ட பூஜா, கிரேட்டர் நொய்டா வந்தால் வேலை வாங்கித்தர உதவுவதாக கூறியுள்ளார். இதையடுத்து பிரஹலாத் கிரேட்டர் நொய்டாவிற்கு வந்தார். அங்குள்ள என்எப்எல் சொசைட்டியில் பிரஹலாத்திற்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது. இதனால் பூஜாவை அடிக்கடி பிரஹலாத் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி இரவு மகேஷ் இல்லாத நேரத்தில், பிரஹலாத் பூஜாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மகேஷ் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது தனது மனைவி, பிரஹலாத்துடன் தனிமையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கத்திரியால் மகேஷை அவரது மனைவியும், பிரஹலாத்தும் சேர்ந்து குத்திக் கொலை செய்தனர். இதன் பின் மகேஷ் உடலை கழிவறையின் மேற்கூரையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஏடிஎஸ் சர்க்கிள் அருகே பூஜா மற்ம் பிரஹலாத் ஆகியோரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோலையும் மீட்டனர். அவர்கள் இருவர் மீதும் பீட்டா 2 காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவைத் தட்டிக்கேட்ட கணவரை காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x