‘இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்’ - ஏன் விமர்சிக்கிறது அமெரிக்கா?


இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக, இந்தியா குறித்து இத்தகைய விமர்சனங்களை அமெரிக்கா முன்வைப்பதில்லை. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் அமெரிக்க எம்.பி இல்ஹான் ஓமர், அதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கத் தயங்குவது ஏன் எனக் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரில் 370-வது சட்டக்கூறு நீக்கம், ஹிஜாபுக்குத் தடை உள்ளிட்ட விவகாரங்களின் அடிப்படையில் இந்தக் கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில், இத்தகைய வார்த்தைகள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது இந்தத் கருத்தை அவர் வெளிப்படுத்தினார். எனினும், அதுகுறித்து அவர் விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை.

உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் இருவரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இல்ஹான் ஓமர், ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x