இணையத்தில் கசிந்த இந்தி மொழி வினாத்தாள்!


குஜராத்தில் 10-ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 10-ம் வகுப்புக்கான இந்தி மொழிப் பாடத் தேர்வு இன்று நடந்த நிலையில், அதற்கான வினாத்தாள் இணையத்தில் வைரலானது. அதில் சில கேள்விகளுக்கான பதில்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தையடுத்து, பாஜக தலைமையிலான குஜராத் அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது. அடிக்கடி தேர்வுத்தாள்கள் வெளியாவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் கட்சி, கல்வித் துறை அமைச்சர் ஜித்து வாகாணி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

“முன்பெல்லாம் வேலைக்கான போட்டித் தேர்வு வினாத்தாள்கள் மட்டும்தான் வெளியாகின. இப்போது 10-ம் வகுப்பு வினாத்தாளுக்கும் அதே கதி ஏற்பட்டிருக்கிறது” என்று காங்கிரஸ் கிண்டல் செய்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என குஜராத் கல்வி வாரியம் தெரிவித்திருக்கிறது.

x