கோவிஷீல்டு பூஸ்டர் டோஸின் விலை: அதார் பூனாவாலா அறிவிப்பு


அதார் பூனாவாலா

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா.

இந்தியாவில் கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தாலும், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்நாடுகளுக்குச் செல்வதில் இந்தியர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 96 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 83 சதவீதம் பேருக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 12 முதல் 14 வயதுள்ளவர்களுக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. 12 வயதுக்குட்ப்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை.

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கிய கோவாவாக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வழங்குகிறது. 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கோவாவாக்ஸ் தடுப்பூசி செலுத்த கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்களைக் கடந்தவர்கள், ஏப்ரல் 10 முதல் கோவிஷீல்டு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். தனியார் மருத்துவ மையங்களில் செலுத்தப்படும் கோவிஷீல்டு பூஸ்டர் டோஸுக்கு 600 ரூபாய் (வரிகள் தனி) செலுத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ்கள் இலவசமாகப் போடப்படும். அதேபோல், சீரம் நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு பூஸ்டர் டோஸ் அங்கீகாரம் கிடைத்ததும் அதன் விலை 900 ரூபாய் ஆக இருக்கும் என்றும் என அதார் பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.

கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசிகளை வாங்கும் மருத்துவமனைகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரிய அளவில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.

x