"வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாகவே தொடரும்" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11-வது முறையாக வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றம் இருக்காது என்றும் வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு ஆர்.பி.ஐ. தரும் ரிசர்வ் ரெப்போ வட்டி 3.35 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் போரால் பணவீக்க விகிதம் 5.7 சதவீதம் ஆக உயரக்கூடும் என்று தெரிவித்த சக்திகாந்த தாஸ், பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக உயரும் என்றும் முன்பு பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "பணவீக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் ஆக இருக்கும். ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் 0.6 சதவீதம் வளர்ச்சி குறையும். உக்ரைன் போர் பல புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்க காரணம்'' என்று தெரிவித்தார்.