மக்களிடம் தேசிய எழுச்சியை உண்டாக்கியவர் `பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய்!


லாலா லஜபதி ராய்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் லாலா லஜபதி ராய். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால் பால் பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். லாலா லஜபத் ராய் பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவர்.

லாலா லஜபதி ராய், 1865 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய மோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் துதி கே என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி. இவர்கள் அகர்வால் பனியாட்கள். சிலர் இவர்களை சமணர்கள் என்கிறார்கள். இந்து சமயம் மற்றும் சமணம் ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் இஸ்லாம் மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபதி ராய் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக்ராவோன் என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு நூல்நிலையமாகவும் மற்றும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

இவர் 1888ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமானவர்களில் ஒருவர். இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் உள்ளிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

x