பத்ம பூஷன் விருதை நிராகரித்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ்!


மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை மறுகணமே, தனக்கு விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் விருது வேண்டாம் என கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் 2000 முதல் 2011 வரை மேற்கு வங்க மாநில முதல்வராக பதவி வகித்தார்.

பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சவுகார் ஜானகி என தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

x