காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்


4 தீவிரவாதிகளின் வரைபடம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் காவல் துறை அறிவித்துள்ளது.

பதேர்வாவில் சட்டர்கல்லா என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூட்டுச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் கடந்த செவ்வாய் அன்று தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பதேர்வா, தாத்ரி, கன்டாஹ் பகுதியில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்களை கைது செய்ய உதவிடும் வகையில் தகவல்களை அளிப்போருக்கு தலா ரூ.5 லட்சம் என்ற வகையில் ரூ.20 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷிவ் கோரி கோயிலுக்கு சென்றுவந்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த அறிவிப்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

x